டயோசீஸ் தேர்தல் அடிதடி-பாதிரியார் மீது வழக்கு
திருநெல்வேலி:
டயோசீஸ் தேர்தல் தொடர்பாக சங்கரன்கோவில் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக பாதிரியார் உட்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நெல்லை டயோசீஸ் தேர்தல் கடந்த 7ம் தேதி துவங்கியது. ஏ.டி.ஜே.சி தினகர் மற்றும் வேதநாயகம் ஆகிய இரு அணிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டன.
இதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் செயலர், குருத்துவ செயலாளர் மற்றும் உதவித் தலைவர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடக்கிறது. இதிலும் ஏ.டி.ஜே.சி.தினகர் மற்றும் வேதநாயகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்பலாபுரம் சேகரத்தில் தேர்தல் தொடர்பாக ஏ.டி.ஜே அணியைச் சேர்ந்த பவுல் என்பவருக்கும் வேதநாயகம் அணியை சேர்ந்த அருளானந்தம் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் இரு அணியை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டனர். இதில் அருளானந்தம், பவுல் ஆகியோர் பலத்தக் காயமடைந்தனர். அருளானந்தம் பாளையங்கோட்டை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மோதல் சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அருளானந்தத்தை தாக்கிய சுப்புலாபுரம் பாதிரியார் கிங்ஸ்லி ஜான், அவரது உதவியாளர் பர்ணபாஸ், மற்றும் ஜான் கென்னடி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதே போல் பவுல் கொடுத்த புகாரின் பேரிலும் அருளானந்தம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சுப்புலாபுரம் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications