கட்டடம் இடிந்து 4 பேர் பலி
அம்பாசமுத்திரம்:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கோவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் இடிபாடுகளில் புதைந்து பலியானார்கள்.
நெல்லை மாவட்டத்தை அடுத்துள்ள கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல் கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கட்டிடப் பணிகள் நடந்து வருகிறது.
நேற்று கோவிலில் கான்கிரீட் தளம் போடும் பணி நடந்தது. இந்தப் பணியில் 20க்கும் மேற்பட்ட கட்டிடத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். வேலைகள் நடைபெறுவதை பொட்டல் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் முருகன் (30) பார்வையிட வந்தார்.
அந்த நேரத்தில் கோவில் மேற்கூரை திடீரென்று பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி பஞ்சாயத்துத் தலைவர் முருகன், கண்ணன் (32), தொழிலாளர்கள் சுப்பு (48) மற்றும் சக்திவேல் (15) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அம்பாசமுத்திரம் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தகளை மீட்டனர். 13 பேர் படுகாயங்களுடன் நெல்லை மற்றும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications