69 கிராம மக்களுடன் ராமதாஸ் போராட்டம்
கடலூர்:
நெய்வேலி அனல்மின் நிலையத்திற்கு நிலம் கொடுத்த கிராம மக்களுக்கு கூடுதல் தொகை வழங்கக் கோரி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் 69 கிராம மக்கள் நாளை நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பு மாபெரும் போராட்டம் நடத்தவுள்ளனர்.
நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்கு அந்த பகுதியில் உள்ள 69 கிராமங்களில் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. நிலம் வழங்கியவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 லட்சம் வரை கொடுக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கல்வி தகுதிக்கேற்ப ஒருவருக்கு வேலை கொடுக்க வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஜவஹர் பள்ளி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பாக ராமதாஸ் தலைமையில் பாதிக்கப்பட்ட 69 கிராம மக்களுடன் போராட்டம் நடைபெறுகிறது.
போராட்டம் குறித்து பாமக எம்.எல்.ஏ வேல்முருகன் கூறுகையில்,
முற்றுகை போராட்டம் பற்றி அறிந்த முதல்வர் கருணாநிதி, மாவட்ட கலெக்டர், காவல்துறை உயரதிகாரிகள், மின்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண என்எல்சி அதிகாரிகளுடன் பேச உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டோம். மறுகுடி அமைப்பு மற்றும் மறுவாழ்வு என்கிற அடிப்படையில் நிலத்தை கொடுத்துவிட்டு இடம் பெயர்பவர்களுக்கு 250 நாட்களுக்கு உதவித் தொகை வழங்கவும், நிலம் மற்றும் குடியிருப்பு முழுவதையும் வழங்கியவர்களுக்கு 750 நாள் உதவித்தொகை வழங்கவும்,
நிலம் மட்டும் வழங்கியவர்களுக்கு 500 நாள் உதவித் தொகை வழங்கவும், நிலம் இல்லாத தொழிலாளர்களுக்கு 625 நாள் உதவித்தொகை வழங்கவும், சிறு தொழில் செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவி தொகை வழங்கவும் என்எல்சி ஒத்துக்கொண்டுள்ளது.
இதன் மூலம் ரூ.50 கோடி வரை இழப்பீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது சிறிய அளவிலான உதவிதான்.
எனவே திட்டமிட்டபடி நாளை என்எல்சி அலுவலகம் எதிரே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெறும். இதில் பாதிக்கப்பட்ட 69 கிராம மக்களும் கலந்து கொள்வார்கள் என்றார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் ஆட்சித் தலைவர் கூறுகையில், முதலமைச்சர் உத்தரவின்படி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கடந்த 2003ம் ஆண்டு திட்டத்தின்படி நிலம் கொடுத்தவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக எம்பி, எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications