புலிகளுடன் தார்மீக உறவு: திருமா.
சென்னை:
விடுதலைப் புலிகளுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே தார்மீக உறவுதான் உள்ளது. நேரடியாக அவர்களுக்கு நாங்கள் பொருட்களை கடத்துகிறோம் என்பதை நிரூபித்தால் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம் என விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்த முயன்றதாக சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெளியீட்டுப் பிரிவு செயலாளர் வன்னிஅரசு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், விடுதலைப் புலிகளுக்கும் எங்களது கட்சிக்கும் இடையே தார்மீக உறவுதான் உள்ளது. விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் நேரடியாக உதவினோம் என்பதை நிரூபித்தால் தாராளமாக எங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
எங்களது கட்சிப் பிரமுகர் கைது விவகாரத்தில் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் சிலரின் சதி இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். மதவாத சக்திகளுடன் தொடர்புடைய அவர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக நாங்கள் ஊகிக்கிறோம்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய ஒரு கட்சியுடன் திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் தொடர்பு இருப்பதாக நினைக்க வைக்கவும், முதல்வர் கருணாநிதிக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் சதியாகவும் இதை நாங்கள் கருதுகிறோம் என்றார் திருமாவளவன்.