கிரிக்கெட் வீரர்கள் விமானத்தில் பறவை மோதல்-அவசரமாய் தரையிறக்கம்
நாக்பூர்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பயணித்த விமானத்தில் பறவை மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நாக்பூரிலிருந்து மும்பைக்கு இன்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானம் கிளம்பியது. இந்த விமானத்தில், இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருந்தனர்.
விமானம் கிளம்பிய 10 நிமிடத்தில் மீண்டும் விமானத்தில் தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு விமானத்தில் இருந்த வீரர்களும் மற்ற பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்.
கிரிக்கெட் வீரர்கள் நாக்பூர் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். இவர்களை தனி விமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விமானத்தில் என்ன கோளாறு என்பது குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கூறுகையில், விமானம் கிளம்பியபோது ஒரு பறவை விமான என்ஜின் பகுதியில் மோதியது. இதில் 2வது என்ஜினின் 9 பிளேடுகள் சேதமடைந்தன. இதையடுத்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் தரையிறக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.