மயிலாடுதுறையில் பாஜக பொதுக் கூட்டத்தில் திமுக கலாட்டா
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் திமுகவினர் புகுந்து கல் வீசி தாக்குதல் நடத்தினர். பாஜக மாநிலத் துணைத் தலைவர் எச்.ராஜா பாதியிலேயே பேச்சை நிறுத்திவிட்டு மேடையில் இருந்து தப்பியோடினார்.
மயிலாடுதுறையில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகம் சமீபத்தில் தாக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை திமுகவினர்தான் தாக்கினார்கள் என்று கூறி அதை கண்டிக்கும் வகையில் மயிலாடுதுறை சின்னக்கடை தெருவில் பாஜக பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பாஜகவின் மாநில துணைத் தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் திமுகவினரை மிகக் கடுமையாக தாக்கினார். மேலும் சேது சமுத்திர திட்டத்தில் திமுக ஊழல் செய்துள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் பாஜக பொதுக் கூட்டத்துக்குள் புகுந்தனர். அவர்களை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தடுத்தனர்.
இதையடுத்து ரோட்டில் கிடந்த கற்களை எடுத்து பொதுக் கூட்ட மேடையை நோக்கி எறிந்தனர். இதில் மேடையில் கட்டப்பட்டிருந்த ட்யூப் லைட்டுகள் உடைந்து சிதறின.
எச்.ராஜா பாதியிலேயே பேச்சை முடித்துக் கொண்டு மேடையின் பின் புறமாக குதித்து தப்பி காரில் ஏறிப் பறந்தார். இதையடுத்து அங்கிருந்த பாஜகவினரை திமுக தொண்டர்கள் தாக்க முயன்றனர். போலீசார் தலையிட்டு அதைத் தடுத்தனர்.
இச் சம்பவத்தால் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்ற பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.