சைமண்ட்ஸை கேலி செய்த 4 ரசிகர்கள் கைது
மும்பை:
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸை இனவெறியை வெளிக்காட்டும் வகையில் கேலி செய்ததாக 4 ரசிகர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பரோடாவில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது குரங்கு போல சைகை காட்டி ரசிகர்கள் கேலி செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வரை இந்த விவகாரம் போய் விட்டது.
இந்த நிலையில் மும்பையில் ேநற்று நடந்த 7வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியின்போதும் சில ரசிகர்கள் சைமண்ட்ஸை கேலி செய்வது போல குரங்கு சைகை காட்டி விஷமத்தனம் செய்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
சைமண்ட்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறியபோது இந்த ரசிகர்கள் இப்படி விஷமத்தனமாக கேலி செய்தனர். இதையடுத்து கேலி செய்த நான்கு ரசிகர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த ரசிகர்கள் குரங்கை போல செய்து காட்டியதை, பத்திரிக்கை போட்டோகிராபர்கள் கூடி நின்று போட்டோ எடுத்தனர். பின் விளைவுகளை அறியாமல் அந்த ரசிகர்களும் போஸ் கொடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போட்டி நடுவர் கிறிஸ் போர்டிடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகம் புகார் கொடுத்தது. இதையடுத்து போலீஸார் நடவடிக்கையில் இறங்கி நான்கு ரசிகர்களையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் கூறுகையில், ஆண்ட்ரூ சைமண்ட்ஸை கேலி செய்வது தவறு. இவர்கள் இப்படி நடந்து கொள்வதால் சைமண்ட்ஸ் எப்படி வேதனை அடைந்துள்ளார் என்பது பற்றி உடன் இருக்கும் எங்களுக்கு மட்டுமே தெரியும். இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இந்த மாதிரியான நடவடிக்கைகளை எங்களால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications