For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் முன்விரோதம்: பண்ருட்டி அருகே வீடுகளுக்கு தீவைப்பு

By Staff
Google Oneindia Tamil News


பண்ருட்டி:

பண்ருட்டி அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக வீடுகளுக்கு நள்ளிரவில் தீ வைக்கப்பட்டது. இதில் 35க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின.

பண்ருட்டி அருகேயுள்ள பெரிய எலந்தம்பட்டு காலனியைச் சேர்ந்தவர் பலராமன்(55). இதே பகுதியைச் சேர்ந்தவர் கலியப் பெருமாள்(58). இவர்கள் இருவரும் இந்த ஊரின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர்களாக இருந்தவர்கள். நீண்ட காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இருதரப்பினரும் அடிக்கடி தாக்கிக் கொள்வது வழக்கம். சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு பலராமன் தனது மனைவி தேன்மொழியை நிறுத்தினார்.

கலியபெருமாள், தனது நண்பரான வழக்கறிஞர் ராமச்சந்திரனின் மனைவி ரத்தினாம்பாளை நிறுத்தினார். இதில் ரத்தினாம்பாள் வெற்றி பெற்றார்.

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற பலராமன் தரப்பினர் எலந்தம்பட்டு காலனிப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு இரவில் தீ வைத்தனர். இதையடுத்து கலியப்பெருமாள் தரப்பினர் தங்கள் பங்குக்கு சில வீடுகளுக்கு தீ வைத்தனர்.

இதனால் அங்கு கடும் பதற்றம் ஏற்பட்டது. தீவிபத்து குறித்து தகவல் தெரிந்ததும், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதிகளிலிருந்து தீயணைப்புப் படையினர் வந்து வெகுநேரமாக போராடி தீயை அணைத்தனர்.

வீடுகளில் இருந்தவர்கள் தப்பி ஓடியதால் உயிர் பிழைத்தனர். ஒரு பெண் பலத்த காயமடைந்தார். 2 மாடுகள் தீயில் கருகி இறந்துவிட்டன.

இதனால் அந்த கிராமத்தில் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது. கடலூர் எஸ்பி பிரதீப்குமார் அங்கு விசாரணை நடத்தி வருகிறார்.

தீ விபத்து சம்பவத்தால் எலந்தம்பட்டு கிராமத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஊரை காலி செய்துவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X