திமுக செயலாளர் கமிஷன் கேட்டு மிரட்டுவதாக மதிமுக புகார்
திருநெல்வேலி:
தமிழக அமைச்சர் கீதா ஜீவனின் தந்தையும், தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளருமான பெரியசாமி, கமிஷன் கேட்டு மிரட்டுவதாக மதிமுக மாவட்ட செயலாளர் புகார் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் நிஜாம் நிருபர்களிடம் கூறுகையில், நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் நெடுஞ்சாலை துறை பணிகளுக்கான ஒப்பந்தத்தினை நான் கடந்த 12 ஆண்டுகளாக எடுத்து நடத்தி வருகிறேன். தற்போது நாபார்டு வங்கியின் உதவியோடு ரூ.7 கோடி செலவில் 40 பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளை டெண்டர் எடுப்பதில் (அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை) தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமி 15 சதவிகித கமிஷனும், அவரது அடியாட்களுக்கு 3 சதவிகித கமிஷனும் ஆக 18 சதவிகித கமிஷன் கேட்டு மிரட்டுகிறார்.
ஏற்கனவே திசையன்விளை காண்ட்ராக்டர் ஜெயக்குமாரின் ஒப்பந்தம் இது போன்ற அரசியல் தலையிட்டால் ரத்து செய்யப்படும் நிலையில் உள்ளது. இது போன்ற செயல்பாடுகள் குறித்து நெல்லையில் ஆட்சியர் தலைமையில் நடந்த ஒப்பந்ததாரர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதிகாரிகளும் இது போன்ற சம்பவங்களுக்கு துணை போகின்றனர்.
இது குறித்து கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications