சேதுவால் நாட்டுக்கு ஆபத்து: ஜெயலலிதா
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை திட்டமிட்டபடி நிறைவேற்றினால் நமது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தக் கால்வாய் வழியாக, பன்னாட்டு போர்க் கப்பல்களும் செல்லும் என்பதால் நமது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் குந்தகம் ஏற்படும்.
இந்தத் திட்டம் நிறைவேறினால், பின்னர் இந்தக் கால்வாய் சர்வதேச கால்வாயாக அறிவிக்கப்பட்டு விடும். இந்தக் கால்வாய் வழியாக பல நாட்டு போர்க் கப்பல்களும் தாராளமாக செல்லும் நிலை ஏற்படும். இது நமது நாட்டுக்கு நல்லதல்ல.
இந்த அடிப்படை விஷயத்தைக் கூட பரிசீலிக்காமல் மத்திய அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற முனைவது வியப்பாக உள்ளது.
இந்த விஷயத்தில் இடதுசாரிகள் சுத்தமான 'அரசியல்' செய்கிறார்கள். அவர்களது பேச்சும், ஆலோசனைகளும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.
சேது சமுத்திரத் திட்டம் பொருளாதார ரீதியாகவும் சாத்தியமானதாக இல்லை. ஆரம்பத்தில் இதற்கு ரூ. 2400 கோடி செலவாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்று ரூ. 4000 கோடியாக இது உயர்ந்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு முதலில் நிதியளிப்பதாக உறுதியளித்திருந்த ஆக்சிஸ் வங்கி இப்போது கை விரித்து விட்டது. மத்திய அரசும் செலவிடுவது போலத் தெரியவில்லை. எனவே இந்தத் திட்டம் நிச்சயமாக நிறைவேறாது.
மேலும் இந்தத் திட்டத்தால் கடல் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும், பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும் என்றார்.