புதிய பட திருட்டு விசிடி-டிவிடிக்கள் ஆயிரக்கணக்கில் பறிமுதல்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே தனிப்படைப் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் புதிய படங்களின் திருட்டு விசிடிக்கள் ஆயிரக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்செந்தூர், ஆறுமுகநேரி பகுதிகளில் புதிய படங்களின் விசிடி, டிவிடிக்கள் புழக்கத்தில் இருப்பதாக தூத்துக்குடி எஸ்.பி தீபக் டமோருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்.ஐக்கள் சைரஸ், பெருமாள், ஜெய்சன், தலைமைக் காவலர் பிரேம்குமார் உள்ளிட்ட 22 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த தனிப்படையினர் திருச்செந்தூர் சுப்பிரமணியாசாமி கோவில் வாளகம், வெளி வீதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சத்தம் போடாதே, கற்றது தமிழ், மருதமலை, பசுபதி, பிறகு, வீரமும் ஈரமும், சீனாதனா, மலைக்கோட்டை, சிவாஜி, கீரிடம் உள்ளிட்ட புதிய படங்களின் விசிடிக்கள், டிவிடிக்கள் ஆயிரக்கணக்கில் சிக்கின.
இந்த டிவிடிகளை வைத்திருந்த கடைகளின் உரிமையாளர்களான கார்த்திகேயன், நீலவண்ணன், சுடலை ஆறுமுகம், காமராஜ், மகேஷ்வரன் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆறுமுகநேரியை சேர்ந்த நடராஜன் என்பவரிடம் தான் டிவிடிக்களை தாங்கள் வாங்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆறுமுகநேரியில் நடராஜன் என்பவரது வீட்டில் அதிரடிப் போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் 360 புதுப்பட டிவிடிக்கள் சிக்கின. இவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நடராஜன் தான் திருச்செந்தூர் பகுதியை சுற்றியுள்ள அனைத்து கடைகளுக்கும் திருட்டு விசிடி, டிவிடி சப்ளை செய்பவர் என்று தெரியவந்தது.












Click it and Unblock the Notifications