சென்னா ரெட்டி மீதே தவறான குற்றம் சாட்டியவர் ஜெ- ஸ்டாலின் தாக்கு
சென்னை:
சென்னா ரெட்டியே தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக சட்டசபையில் கூறியவர் தான் ஜெயலலிதா என உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

சட்டசபையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சனையை கொண்டு வந்து பேசிய ஸ்டாலின் பேசுகையில்,
எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று பேட்டி அளித்தபோது தன்னை கொல்ல சதி நடப்பதாகவும், அதுபற்றி நானும் முதல்வரும் ரகசியமாக பேசிய பேச்சு வேண்டியவர்கள் மூலம் தனக்கு தகவலாக கிடைத்ததாகவும், அடுத்த தேர்தல் வரை அவர் உயிரோடு இருந்தால்தானே என்று நான் கூறியதாகவும் சொல்லியிருக்கிறார்.
இது சில ஏடுகளில் செய்திகளாக வந்துள்ளது. அதிமுக எப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும், அப்போதெல்லாம் ஜெயலலிதா இதுபோல பேசுவது அவருக்கு வாடிக்கையாகிவிட்டது.
காரில் லாரியை மோதி கொல்லப் பார்த்ததாக சொன்னார்கள். யாராவது தலைவர்களை குறிப்பிட்டு அவர்கள் மீது கொலைப்பழி கூறினார்கள். முன்னாள் கவர்னர் சென்னா ரெட்டியையே தவறாக நடந்ததாக சொன்னார்கள்.
அவரது வீட்டுக்கு மேலே விமானம் பறந்தால் சந்தேகம். இதெல்லாம் அவருக்கு ஒரு போபியா'. எதிர்க்கட்சி தலைவர் சொன்னதற்கெல்லாம் உண்மையான ஆதாரங்களை காட்டி நிரூபிக்க முன் வரவேண்டும்.
அவைக்கு வெளியே அவர் இதை பேசி இருக்கிறார். எனவே நீதிமன்றம் மூலம் இதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.
ஜெயலலிதா தெரிவித்த இந்த தகவல் சில பத்திரிகைகளில் வந்திருக்கிறது. ஒரு தனியார் தொலைக்காட்சியிலும் (ஜெயா டிவி) செய்தி வெளியானது. அவற்றின் மீது உரிமை பிரச்சினை கொண்டு வருகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications