ஏர் இந்தியா-இந்தியன் நிறுவனங்கள் இணைப்பு தீவிரம்
துபாய்:
ஏர்-இந்தியா மற்றும் இந்தியன் விமான நிறுவனங்கள் இணைக்கப்படுவது பயணிகளுக்கு பெரும் பயனளிக்கும் என ஏர்-இந்தியா நிறுவன செய்தித் தொடர்புப் பிரிவு இயக்குனர் ஜிதேந்திரா பார்கவா கூறியுள்ளார்.
கலீஜ் டைம்சுக்கு அவர் அளித்த பேட்டியில்,
இரு நிறுவனங்களுக்கும் இடையிலான நிர்வாக அளவிலான இணைப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. பிற மட்டங்களில் ஒருங்கிணைப்பு நடந்து கொண்டுள்ளது. விரைவில் இந்த இணைப்புப் பணிகள் முடிவடையும்.
ஏர் இந்தியாவுக்கு 111 புதிய விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 16 விமானங்கள் ஏற்கனவே வாங்கப்பட்டுவிட்டன. மீதி விமானங்கள் 2011ம் ஆண்டுக்குள் படிப்படியாக வாங்கப்படும்.
ஏர் இந்தியா ஏற்கனவே பல்வேறு புதிய மார்க்கங்களில் விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இணைப்புக்குப் பின்னர் மேலும் பல்வேறு புதிய மார்க்கங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
சமீபத்தில் நாக்பூர் மற்றும் துபாய் இடையேயான விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 28ம் தேதி முதல் துபாய் மற்றும் ஜெய்ப்பூர் இடையே விமான சேவை துவக்கப்படவுள்ளது.
விரைவில் துபாய் மற்றும் கோவா இடையேயான நேரடி சேவை துவங்கப்படும் திட்டமும் உள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் விமானப்போக்குவரத்துத் துறையில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. உலகில் இந்தியாவும் மிகப்பெரும் சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்த இணைப்பு புதிய சவால்களைச் சந்திக்க ஏதுவாக இருக்கும் என்றார்.
விமானங்கள் தாமதமாகவது குறித்து கேட்டபோது, இது அனைத்து விமான நிறுவனங்களிலும் நடைபெறுகிறது. இணைப்பு ஏற்பட்டால் பயணிகள் காக்க வைக்கப்படாமல் வேறு விமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.