ராகுல்காந்தி பெயரில் மோசடி செய்த வாலிபர் கைது
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி பெயரில் பேரவை அமைத்து நூதன மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், மேலக்கடையநல்லூரைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மகன் கணேசன் (40). இவர் ராகுல்காந்தி பேரவை என்ற அமைப்பை நடத்தி வந்துள்ளார். இது தவிர நெல்லை மாவட்டத்தின் புறநகர் பகுதி சோனியாகாந்தி பேரவையின் தலைவராகவும் இருப்பதாகவும் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டார்.
6 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள குருவிக்குளம் கிராமத்திற்கு சென்ற கணேசன், அப்பகுதி மக்களிடம் நான் சோனியா காந்தி பேரவையின் தலைவராக இருக்கிறேன். சோனியாகாந்தி பேரவை சார்பில் ஏகப்பட்ட நிதி ஏழை மக்களுக்கு உதவி செய்யப்படவுள்ளது.
இந்த உதவியை பெற வேண்டுமானால், நீங்கள் பேரவையில் உறுப்பினராக சேர வேண்டும் என்று கூறியுள்ளார். உறுப்பினர்களாக சேருபவர்களுக்கு ரூ.30 ஆயிரம் நிதியுதவியும், இலவச வீடும் கட்டித்தரப்படும் அது போக 60 வயதானால் உதவித் தொகையும் கொடுக்கப்படும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டுள்ளார்.
கணேசனின் பேச்சை நம்பி, இலவச வீடும், 30 ஆயிரம் பணமும் கிடைக்கப் போகிறது என்ற ஆசையால் அந்த கிராமத்தை சேர்ந்த பலரும் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். அவர்களிடம் பேரவை நிதியாக ஆயிரக்கணக்கில் பணத்தை வசூலித்துள்ளார் கணேசன்.
பணத்தை வாங்கிச் சென்ற கணேசன் குருவிகுளம் கிராமத்தின் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. இதனால் அந்த கிராமத்து மக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் கணேசன் நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், தான் செய்த மோசடியை கணேசன் ஒத்துக்கொண்டார். இதனையடுத்து போலீசார் கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.