மாணவனை அடித்த ஆசிரியர் மீது வழக்கு!
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள ஒரு பள்ளியில், சரியாக படிக்காத மாணவனை அடித்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கில்லை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன். இவருக்கு முரளிதரன் என்ற மகன் உள்ளார். இவர் அருகில் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படி்த்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டு இருந்ததை கவனிக்காமல் மாணவன் முரளிதரன் அலட்சியமாக இருந்துள்ளார். மாணவனின் இந்த செயலை பார்த்த ஆசிரியர், அவனிடம் பாடம் குறித்து கேள்வி கேட்டதற்கு சரியான பதில் சொல்லவில்லையாம். இதனால் ஆசிரியர் நெடுமாறன், மாணவன் முரளிதரனை அடித்துள்ளார்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற முரளிதரன் தன்னை ஆசிரியர் நெடுமாறன் அடித்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது பெற்றோர் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
பின்பு கில்லை காவல் நிலையத்தில் மகனை அடித்த ஆசிரியர் மீது பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் ஆசிரியர் நெடுமாறன் மீது கில்லை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாணவனை கண்டித்ததற்காக ஆசிரியரின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.