அவதூறு ஜெயலலிதா-காங்கிரஸ் தாக்கு
சென்னை:
எப்போதுமே, எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறுகளை பரப்ப வேண்டும் என்ற நோக்கம் கொண்ட ஜெயலலிதா, முதல்வர் கருணாநிதி-அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் மீது ஜெயலலிதா குற்றச்சாட்டுகளை கூறுவதில் வியப்பில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதலமைச்சர் கருணாநிதி, உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொலைப்பழி குற்றம் சாட்டியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
எப்போதுமே, எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறுகளை பரப்ப வேண்டும் என்ற நோக்கம் கொண்ட ஜெயலலிதா, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவதில் வியப்பில்லை. ஜெயலலிதாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் ஸ்டாலின், சட்டப் பேரவையில் உரிமை மீறல் பிரச்சனையாக கொண்டு வந்தபோது, அதிமுகவினர் நடந்து கொண்ட முறை ஜனநாயக உணர்வு உள்ளவர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வாகும்.
அதுமட்டுமல்ல பேரவையின் மாண்பை கொச்சைப்படுத்தும் வகையில் அநாகரீகமான முறையில் அவர்கள் நடந்துகொண்டதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது.
குறிப்பாக, பேரவைத் தலைவரை நோக்கி அவைக் காவலர் தொப்பியை பிடுங்கி எறிந்திருப்பது, சட்டப் பேரவை விதிகளை குழிதோண்டி புதைக்கிற செயலாகும். இதை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
சட்டப் பேரவையில் கருத்து மோதல்களை ஜனநாயக உணர்வுடன் நடத்துவதில் நம்பிக்கை இல்லாதவர்கள், சர்வாதிகார சிந்தனையோடும், பாசிச போக்கோடும் செயல்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.