திருவனந்தபுரம்-நாகர்கோவில் ரயிலில் தீ: பயணிகள் தப்பினர்
நாகர்கோவில்:
திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வந்துகொண்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருவனந்தபுரம்-நாகர்கோவில் பாசஞ்சர் ரயில் நேற்று காலை 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு கிளம்பியது. 14 பெட்டிகளுடன் வந்த அந்த ரயிலில் 800க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
காலை 8.50 மணிக்கு இரணியல் ரயில் நிலையத்தைத் தாண்டி பள்ளியாடி அருகே உள்ள பழையகடை குகை பாலத்தை ரயில் அடைந்தது.
அப்போது ரயிலின் என்ஜினில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து மிக புத்திசாலித்தனமாக செயல்பட்ட டிரைவர் ரயிலை மெதுவாக இயக்கி முதலில் குகையை விட்டு வெளியே வரச் செய்தார்.
குகைக்கு வெளியே வந்தவுடன் சடன் பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். ரயிலில் இருந்த பயணிகளையும் உடனே இறங்கச் செய்தார்.
தீயும் புகையுமாக இருந்தது கண்ட பயந்து போன பயணிகள் அலறியடித்துக்கொண்டு ரயிலை விட்டு குதித்து குகை பாலத்தின் மேல்பகுதியில் உள்ள சாலைக்கு ஓடினர்.
தகவல் அறிந்த குழித்துறை தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். தீயணைப்பு வாகனங்களை குகைப் பாலத்தின் மேல்பகுதி சாலையில் நிறுத்திக் கொண்டு அங்கிருந்து என்ஜின் மீது நீரைப் பாய்ச்சி தீயை அணைத்தனர்.
பின்னர் மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு ரயில் நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
தீப் பற்றிய நிலையில் குகைக்குள் ரயில் நின்றிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். தீயை அணைப்பதும் சிரமமாகியிருக்கும். குகைக்கு வெளியே என்ஜினைக் கொண்டு வந்து நிறுத்தியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தால் சென்னை-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி-பெங்களூர் எக்ஸ்பிரஸ் மற்றும் பல ரயில்கள் தாமதமாயின.