சிறை துப்பாக்கிகளை வீட்டுக்கு எடுத்து சென்ற காவலர் டிரான்ஸ்பர்
திருநெல்வேலி:
பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து தூத்துக்குடி கிளை சிறைக்கு எடுத்து செல்லப்பட்ட 2 துப்பாக்கிகளை அலட்சியமாக 2 நாட்கள் கழித்து ஒப்படைத்த சிறை காவலர் அதிரடியாக திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார்.
தூத்துக்குடி மற்றும் தென்காசி கிளைச் சிறையிலிருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தலா 7 துப்பாக்கிகள் வீதம் மொத்தம் 14 துப்பாக்கிகள் சுத்தப்படுத்துவதற்காக பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு காவலர்கள் கொண்டு வந்தனர்.
பின்னர் அவைகளை பாளையில் சிறையில் உள்ள உயர் அதிகாரிகளுடன் ஒப்படைத்து விட்டு காவலர்கள் சென்று விட்டனர். இதனையடுத்து பாளை சிறையில் இருந்த 12 துப்பாக்கிகள் சுத்தப்படுத்தப்பட்டு கிளை சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தூத்துக்குடி கிளை சிறைக்குரிய 2 துப்பாக்கிகள் மட்டும் ஓரிரு நாட்கள் கழித்து அனுப்பி வைக்கப்படும் என பாளை சிறை அதிகாரி தூத்துக்குடி கிளை சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் தூத்துக்குடி கிளை சிறையில் இருந்து சிறை காவலர் பெருமாள் 2 துப்பாக்கிகளையும் எடுத்து கொண்டு பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கிளம்பினார்.
ஆனால், சிறைக்குச் செல்லாமல் நேராக தன் வீட்டுக்குப் போய்விட்டார். போனவர் அப்படியே 2 நாட்கள் வீட்டிலேயே தங்கி விட்டார்.
இந் நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன் தூத்துக்குடி கிளை சிறையில் திடீர் சோதனை நடத்தியபோது அங்கு 2 துப்பாக்கிகள் குறைவாக இருந்தது கண்டு கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அவர் அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டபோது 2 துப்பாக்கிகளை காவலர் பெருமாள் பாளையங்கோட்டை சிறைக்கு வாங்க சென்றுள்ளார் என்றனர்.
பாளை சிறையில் விசாரித்தபோது நேற்று முன்தினமே அவரிடம் துப்பாக்கிகளை கொடுத்து அனுப்பி விட்டோமே என்றார்.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாளை மத்திய சிறையிலிருந்து 2 நாட்களுக்கு முன்னர் 2 துப்பாக்கிகளை வாங்கி சென்ற காவலர் பெருமாள் வீட்டில் வைத்து விட்டு ஓய்வெடுத்த விவரம் தெரியவந்தது.
இதுகுறித்து தமிழக சிறை ஏ.டி.ஜி.பி.சேகர் மற்றும் தென்மண்டல சிறை துறை டி.ஐ.ஜி மூர்த்தி ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி கிளைச் சிறை காவலர் பெருமாள் அதிரடியாக திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.