ஈழத் தமிழர்களுக்காக பிரதமர் வீடு முன் போராட்டம்- டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு
சென்னை:
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிடக் கோரி பிரதமர் மன்மோகன் சிங் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கைத் தமிழர்கள் கடந்த 30 வருடங்களாக சுயநிர்ணய உரிமைக்காக பல வழிகளில் போராடி வருகிறார்கள். எனினும் இந்த பிரச்சனை இன்னும் தீரவில்லை. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தமிழக அரசியல் கட்சிகள் அவ்வப்போது ஓங்கி குரல் கொடுப்பதும், அனுகூலம் ஏற்படாது என்று கருதும்போது ஆதரவு குரலை கைவிடுவதும் என இரட்டை போக்கை கடைபிடித்து வருகின்றன.
ஆட்சியில் உள்ளவர்கள், எதிர் கட்சியினர் எவரும் இலங்கை தமிழர் பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசு இலங்கை ராணுவத்திற்கு மறைமுகமாக ராணுவ உதவிகள் செய்து வருகிறது. கடந்த 1983ம் ஆண்டு தமிழர்கள் எப்படிக் கொல்லப்பட்டார்களோ அதே போல் இப்போது அவர்களுக்கு இன்னல்கள் நடந்து வருகின்றன. அவர்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து உணவுப்பொருட்கள், மருந்துகளை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சனையைப் பற்றி வெளியேயும், வெளிநாடுகளிலும் பேசும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சட்டமன்றத்தில் பேச ெமளனம் சாதிப்பது வியப்பாக இருக்கிறது. பிரச்சனை பற்றி இப்போது பேசாமல் பிறகு எப்போது பேசப்போகிறார்கள்.
இலங்கை தமிழர்களை பாதுகாக்கவும், பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பது தொடர்பாகவும், தற்போது நடந்துவரும், சட்டமன்ற கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் இனிமேல் எந்த அரசியல் கட்சித் தலைவர்களாவது இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி வெளியே பேசினால் அவர்கள் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவோம். மக்களிடத்தில் அவர்களை அம்பலப்படுத்துவோம்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு தலையிடக்கோரி அடுத்த மாதம் நவம்பர் 6ம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications