ஜீவஜோதி வீடு புகுந்து சூறையாடிய வழக்கு: 'அண்ணாச்சி' ராஜகோபால் விடுதலை!
சென்னை:
சென்னை வேளச்சேரியில் ஜீவஜோதி குடியிருந்தபோது அவரது வீடு புகுந்து சூறையாடியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்தும் சரவணபவன் அதிபர் ராஜகோபால் விடுதலையாகி விட்டார்.
ஜீவஜோதியின் முதல் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சிக்கி ராஜகோபால் முதலில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் மீது இரு வழக்குகள் தொடரப்பட்டன.
அதில் ஒன்று வேதாரண்யம் அருகே உள்ள ஜீவஜோதி வீட்டுக்குச் ெசன்று ஜீவஜோதியையக் கடத்த முயன்றதாக வேதாரண்யம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு. இன்னொன்று, பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தப்பட்ட சமயத்தில் வேளச்சேரியில் ஜீவஜோதி வசித்து வந்த வீட்டிற்கு அடியாட்களுடன் சென்று வீட்டை சூறையாடியதாக சைதாப்பேட்டை கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.
வேதாரண்யம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கிலிருந்து ஏற்கனவே ஜீவஜோதி ஆகியோரின் பிறழ் சாட்சியம் காரணமாக ராஜகோபால் விடுதலையாகி விட்டார்.
அதேபோல வீடு சூறையாடப்பட்ட வழக்கிலிலும் ஜீவஜோதி தரப்பு பிறழ் சாட்சியம் அளித்ததால், வழக்கு ராஜகோபாலுக்கு சாதகமாக மாறியது. நேற்று இந்த வழக்கு நீதிபதி பெஞ்சமின் முன்பு விசாரணைக்கு வந்தது.
வீட்டின் உரிமையாளரான சந்திரன், ஜீவஜோதியின் தம்பி ராம்குமார் ஆகியோர் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கிலிருந்து ராஜகோபால் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications