குண்டுவெடிப்பில் அரசுக்குத் தொடர்பு: பெனாசிர்
கராச்சி:
தற்கொலைப்படை தாக்குதல் மூலம் என்னைக் கொல்ல முயன்ற சம்பவத்தில், முஷாரப் அரசில் உள்ள 3 முக்கிய அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளதாக பெனாசிர் பூட்டோ குற்றம் சாட்டியுள்ளார்.
8 வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் திரும்பிய பெனாசிர் பூட்டோவுக்கு, அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் வரவேற்பு கொடுத்த ஊர்வலமாக ஜின்னா நினைவிடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்ேபாது திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. அடுத்தடுத்து நடந்த 2 குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெனாசிர், பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்ேபாது பெனாசிர் பேசுகையில், வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பும் எனக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தனர். ஆனால் அதையும் மீறி நாடு திரும்பிய எனக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தற்போதுள்ள ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் தவறிவிட்டார்.
இனிமேல் நான் பொதுக்கூட்டமோ அல்லது ஊர்வலமோ நடத்த திட்டமிட்டாலும், தற்கொலைப்படை தாக்குதல் அபாயம் இருக்கிறது என எச்சரிக்கை விடப்படுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.
நான் நாடு திரும்பிய தினம் எனது ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த தாக்குதல் தனிநபர் மீதானது அல்ல. பாகிஸ்தானின் ஜனநாயகம், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
என் தந்தையை தூக்கில் போட்ட, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஜியா உல் ஹக்கின் ஆதரவாளர்கள்தான் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கின்றனர் என்பதில், எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.
நான் மீண்டும் பாகிஸ்தான் திரும்புவதால், ஜனநாயகத்தை ஏற்படுத்துவதில் உறுதியுடன் இருப்பதாலும், தங்கள் செல்வாக்குக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடுமோ என பயந்து இந்த செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாத இயக்கங்களுக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதையும் மறுக்க முடியாது. அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவு இல்லாமல் இப்படிப்பட்ட இயக்கங்கள் செயல்படமுடியாது.
இந்த குண்டுவெடிப்பிற்கு காரணம், முஷாரப்புக்கு நெருக்கமான 3 உயர் அதிகாரிகளே காரணம் என்று கூறிய பெனாசிர் அவர்களின் பெயர்களை தெரிவிக்க மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications