நாயுடன், மகனைக் கட்டிப் போட்ட பெற்றோர்!
இடுக்கி:
தங்களது 3வயது மகனை நாயுடன் சேர்த்து கட்டிப் போட்ட கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
இடுக்கி மாவட்டம் மாவடி கிராமத்தைச் சேர்ந்த பென்னி, மஞ்சு ஆகியோர் கூலி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு 3 வயதில் அரோமால் என்கிற மகன் உள்ளான். தினசரி வேலைக்குப் போகும்போது அவர்கள் தங்களது மகனை, வீட்டில் உள்ள நாயுடன் சேர்த்து சங்கிலியால் கட்டிப் போட்டு விட்டு வேலைக்குப் போவது வழக்கமாம்.
அந்த 3 வயது சிறுவன், தினசரி நாயுடன் சேர்த்து வீட்டுக்குள் வளைய வருவானாம். அந்தத் தம்பதியின் உறவினர்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அவர்களை கல்யாணம் ஒன்றுக்கு அழைப்பதற்காக வந்தவர்கள், வீட்டில் நாயுடன், சிறுவன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர்.
நாய்க்கு வைக்கப்படும் தட்டில் போடப்பட்டிருந்த உணவைத்தான் நாயும், அந்த அப்பாவிச் சிறுவனும் சாப்பிடுவார்களாம். இந்தக் கொடூரத்தைப் பார்த்து கொதித்த அந்த உறவினர்கள், கிராமத்து மக்களிடம் இதைத் தெரிவித்தனர். அவர்கள் பதைத்துப் போய் சாந்தம்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து பென்னியையும், மஞ்சுவையும் கைது செய்தனர். சிறுவனை மீட்டனர். சிறுவனின் உடல் முழுவதும் தீக்காயங்கள் உள்ளன. நீண்ட காலமாக சங்கிலியால் கட்டிப் போட்டதால் அவனது கைகளில் பெரும் தழும்புகள் ஏற்பட்டுள்ளன.
ராஜக்காடு என்ற இடத்தில் உள்ள சிறார் பாதுகாப்பு மையத்தில் அந்த சிறுவனை போலீஸார் சேர்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications