விவசாயிகளுக்கு இழப்பீடு: பாமகவுக்கு கருணாநிதி உறுதி
சென்னை:
நெய்வேலி அணல் மின் கழக விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கொடுத்த கிராமத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கனிவுடன் பரிசீலிக்கும். எனவே அதுகுறித்து பாமக கவலைப்பட வேண்டாம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சட்டசபையில் நேற்று பாமக உறுப்பினர் வேல்முருகன் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானித்திற்குப் பதில் அளித்து முதல்வர் பேசுகையில், என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த கிராமத்தினரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக உறுப்பினர் இங்கே எடுத்துரைத்தார். அந்த கிராமத்தினரின் கோரிக்கைகள் குறித்து அரசு கனிவுடன் பரிசீலித்து, உரிய நடவடிக்கையை எடுக்கும். எனவே பாமக இதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என்றார்.
முன்னதாக வேல்முருகன் பேசுகையில், நிலக்கரிச் சுரங்கச் சட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் உள்ள 60 கிராமங்களில், மாநில அரசின் மூலமாக என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்துகிறது. ஆனால் கிராமத்தினருக்கு உரிய இழப்பீடு தரப்படுவதில்லை.
என்.எல்.சி. நிறுவனத்திற்கு, நிலக்கரி வெட்டியெடுப்பதன் மூலம், ஒரு ஏக்கருக்கு, ஆண்டுக்கு ரூ. 30 கோடி லாபம் கிடைக்கிறது. ஆனால் இந்த லாபத்தில் ஒரு சதவீதத்தை கூட தர என்.எல்.சி. நிறுவனம் முன்வரவில்லை.
என்.எல்.சி. நிறுவனத்தில் 17 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். 3000 பயிற்சித் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களது பணியை நிரந்தரமாக்க பல்வேறு வகையான போராட்டங்களை அவர்கள் நடத்திப் பார்த்து விட்டனர். ஆனால் இதுவரை என்.எல்.சி. நிறுவனம் அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.
என்.எல்.சி. நிறுவனம் தொழிலாளர்களை மட்டும் வஞ்சிக்கவில்லை. சமூக பொறுப்பையும் தட்டிக் கழிக்கும் வகையில் நடந்து கொள்கிறது. என்.எல்.சி. மருத்துவமனையை உள்ளூர் கிராமத்தினர் பயன்படுத்திக் கொள்ள நிர்வாகம் அனுமதிப்பதில்லை. மேலும் குடிநீர் வசதியையும் கிராமத்தினர் பயன்படுத்த என்.எல்.சி நிர்வாகம் அனுமதிப்பதில்லை.
ஏதோ ஒரு தனி மாநிலம் போல என்.எல்.சி. நிர்வாகம் செயல்பட்டு வருகிது.
என்.எல்.சி. நிர்வாகத்தின் போக்கைக் கண்டித்து அக்டோபர் 18ம் தேதி ஒரு லட்சம் கிராமத்தினரைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டிருந்தார். இருப்பினும் முதல்வரின் உறுதிமொழியை ஏற்று அடையாளப் போராட்டமாக அது பின்னர் மாற்றப்பட்டது.
என்.எல்.சி. விவகாரத்தை மத்திய நிலக்கரித்துறை அமைச்சரிடம் எடுத்துக் கூறி ஆவண செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிராமத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வேல்முருகன்.












Click it and Unblock the Notifications