ராம் லீலா விழாவில் கருணாநிதியின் கொடும்பாவி எரிப்பு
அலகாபாத்:
உ.பி. மாநிலம் அலகாபாத்தில் தசரா விழாவையொட்டி நடந்த ராம் லீலா நிகழ்ச்சியின்போது முதல்வர் கருணாநிதியின் கொடும்பாவியை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று நாடு முழுவதும் விஜயதசமி விழா தசரா என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் தசரா விழாவின்போது ராம் லீலா நிகழ்ச்சி கொண்டாடப்படும். ராவணனை வென்ற ராமனுக்காக கொண்டாடப்படும் விழா இது.
ராம் லீலா நிகழ்ச்சியின்போது ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படும். இதை வட மாநிலங்களில் பெரிய நிகழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்த ஆண்டு ராம் லீலா நிகழ்ச்சியின்போது, ராமர் குறித்து அவதூறான கருத்துக்களைக் கூறியதற்காக முதல்வர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரிக்க வேண்டும் என வி.எச்.பி. உள்ளிட்ட இந்து மத அமைப்புகள் கூறியிருந்தன.
இந்தப் பின்னணியில், நேற்று அலகாபாத் நகரில் நடந்த ராம் லீலா நிகழ்ச்சியின்போது, ராவணன் உருவபொம்மை வழக்கம் போல எரிக்கப்பட்டது. பின்னர் முதல்வர் கருணாநிதியின் கொடும்பாவியையும் விழாக் குழுவினர் எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ராமர் குறித்து கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்ததாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications