நெல்லையில் ரூ. 9 லட்சம் மோசடி: 14 பேர் மீது வழக்கு
திருநெல்வேலி: நெல்லையில் போலி ஆவணங்கள் மூலம் கோவில் பணத்தை மோசடி செய்த ஓய்வு பெற்ற தாசில்தார் உட்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ காலனியில் வரசித்தி விநாயகர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இதே பகுதியை சேர்ந்த முத்தையா, இந்த கோவிலின் டிரஸ்ட் உறுப்பினராக இருந்து வருகிறார்.
முத்தையா, கோவில் டிரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் ஆடிட்டர் ஆகியோர் கோவில் கணக்குகளை சரி பார்த்தனர். அப்போது போலி ஆவணங்கள் மூலம் கோவில் பணம் சுமார் 9 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த மோசடியில் கோவில் டிரஸ்டின் முன்னாள் உறுப்பினர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தற்போதுள்ள கோவில் டிரஸ்ட் பொறுப்பாளர்கள் இந்த மோசடி குறித்து நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திருமலையாண்டி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதன்பின்னர் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வரசித்தி விநாயகர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் டிரஸ்ட் முன்னாள் உறுப்பினர்களான பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் வெங்கடாசலம், செல்வராஜ், தெட்சிணாமூர்த்தி, ராமசந்திரன், பாலசுப்பிரமணியன் வேலாயுதமூர்த்தி, ஜெகவீரராம பாண்டித்துரை, துரைரெங்கா, முத்துகுமாரசாமி, விஸ்வநாதன், சீனிவாசன், சுப்புலெட்சுமி, கோவில் அர்ச்சகர் குலசேகர பட்டர் சுப்பிரமணியன் ஆகிய 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications