மகனை கோடாரியால் வெட்டிக் கொன்ற தாய்
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், வி.கே.புரம் அருகே தூங்கிக் கொண்டிருந்த மகனை கோடாரியால் வெட்டி கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.
வி.கே.புரம் அருகே உள்ள வடக்கு அகஸ்தியர்புரத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி பூவம்மாள். இவர்களது மகன் தெய்வேந்திரன். சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் பாளையஞ்செட்டியை சேர்ந்த விஜயலெட்சுமி என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு வயதில் மதனா என்ற பெண் குழந்தை உள்ளது. விஜயலெட்சுமி தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார். அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் தெய்வேந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார். விஜயலட்சுமி சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று தெய்வேந்திரனின் அலறல் சத்தம் கேட்டது.
பயந்து போன விஜயலெட்சுமி தெய்வேந்திரன் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பூவம்மாள் கோடாரியை எடுத்து தெய்வேந்திரனின் கழுத்தில் வெட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களின் உதவியைக் கோரி கத்தினார்.
இதையடுத்து பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். அவர்களை பார்த்த பூவம்மாள், கோடாரியுடன் அவர்களையும் வெட்ட முயன்றார். இதனால் பயந்து போன அவர்கள் அங்கிருந்து ஓடினர்.
இந்த நிலையில், கோடாரியால் வெட்டப்பட்ட தெய்வேந்திரன் துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகனைக் கொன்று விட்டு கோடாரியும், கையுமாக இருந்த கைது செய்தனர்.
எதற்காக இந்தக் கொலை நடந்தது என தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications