இலங்கை அரசின் மசோதா நகைப்புக்குரியது: சுப. தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி: விடுதலைப் புலிகள் தேர்தலில் பங்கேற்றுப் போட்டியிடலாம் என்று இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள சட்ட மசோதா, நகைப்புக்குரியது, உலக சமுதாயத்தை ஏமாற்றும் செயல் இது என விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சுப.தமிழ்ச்செல்வன் அளித்துள்ள ஒரு பேட்டியில், அனுராதபுரம் விமான தளம் அழிக்கப்பட்டு விட்டது. அங்கிருந்த விமானங்களும் அழிக்கப்பட்டு விட்டன. இந்த விமான தளத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் குடியிருப்புகள், வாழ்விடங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவற்றை அழித்து வந்த இலங்கை படைகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தங்களை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட விமான தளம் அழிந்துள்ளதால், தமிழ் மக்கள் நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் உள்ளனர். கரும்புலிகள் படையினரின் சாதனைச் செயல் அவர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
சட்ட மசோதா நகைப்புக்குரியது:
ஆரம்ப காலத்தில் ஜனநாயக வழியில் தமிழர்களின் உரிமைகளை பெறுவதற்காக புலிகள் போராடிய காலத்தில், இலங்கை அரசும், சிங்கள இனவாதிகளும், ஏற்காமல் வன்முறையைக் கட்டவிழ்த்து தமிழ் இனப் படு கொலையை நடத்தி வந்தனர்.
எனவேதான் புலிகள் அமைப்பு ஆயுதப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் இன்று, தேர்தலில் போட்டியிடலாம், அரசியல் கட்சியாக செயல்படலாம் என இலங்கை அரசு கூறுவது நகைப்புக்கிடமானது. ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. இது சர்வதேச சமுதாயத்தை ஏமாற்றும் செயல் என்று கூறியுள்ளார் தமிழ்ச்செல்வன்.