இலங்கை வான் பகுதியில் பாதுகாப்பு குறைவு: விமானப்படை
கொழும்பு: இலங்கை வான் எல்லையின் சில பகுதிகளில் பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் வரை இந்தப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அபாயம் அதிகமாகவே இருக்கும் என்று இலங்கை விமானப்படை அதிகாரி கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் தற்ேபாது வான் ரீதியாகவும் பலம் பெற்று விட்டனர். இலங்கையில் உள்ள கொழும்பு கட்டுநாயகே விமான தளம், பலாலி விமான தளம் மற்றும் அனுராதபுரம் விமான தளம் ஆகியவற்றைத் தாக்கி இலங்கை அரசை நிலை குலைய வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை வான் எல்லை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து விமானப்படை கமாண்டர் ரோஷன் கூனதிலகே செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கைக்கென வான் பாதுகாப்பு அமைப்பு எதுவும் இல்லை. அது ஏற்படுத்தப்படும் வரை இலங்கையின் சில பகுதிகளில் புலிகளின் தாக்குல் அபாயம் அதிகமாகவே இருக்கும்.
சில பகுதிகளில் பாதுகாப்பு உள்ளது. சில இடங்களில் அது இல்லை. சில இடங்களை நாங்கள் மிகவும் பாதுகாப்பாக வைத்துள்ளோம். ஆனால் இப்போதைக்கு ஒட்டு மொத்த இலங்கை வான் பகுதியையும் எங்களால் பாதுகாக்க இயலாத நிலை இருக்கிறது.
சில முக்கியப் பகுதிகளில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல முக்கிய விமானங்களை இழந்துள்ளதால் எங்களது தாக்குதல் வலிமை குறைந்து விட்டதாக கூற முடியாது. இழந்த விமானங்களுக்குப் பதில் வேறு விமானங்கள் விரைவில் பணியில் ஈடுபடுத்தப்படும என்றார் அவர்.
ஒட்டுமொத்த இலங்கையையும் பாதுகாக்க முடியாத நிலை இருப்பதாக இலங்கை விமானப்படை அதிகாரி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ. 700 கோடி இழப்பு!!
இதற்கிடையே, அனுராதபுரம் விமான தளத்தில் புலிகள் நடத்திய விமான தாக்குதலில் ரூ. 700 கோடி மதிப்புக்கு இலங்கை விமானப்படைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.
இந்த இழப்பு விவரத்தை மக்களுக்குத் தெரிவிக்காமல் இலங்கை அரசு மறைப்பதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது.
6 ராணுவ வீரர்கள் பலி
இதற்கிடையே, விடுதலைப் புலிகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி வவுனியாவில் ஆறு ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அது எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியதில் இவர்கள் உயிரிழந்தனர். கல்மடு என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.