நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரத்தில் பஸ்பர் கிணறு என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் அருந்தததியர் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிபவர்களும் கடந்த 25 ஆண்டுகளாக குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் மூலம் ஓட்டு வீடுகள் அமைத்து கொடுத்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அப்பகுதி மக்கள் கடந்த 1982 முதல் 1996 வரை புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வருவதால் தாங்களுக்கு இலவச வீட்டுமனைகள் கேட்டு மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்படும் ஒவ்வொரு ஆட்சியரிடமும் மனு கொடுத்து வந்துள்ளனர்.
இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுற்று சுவர் எழுப்ப உள்ளதாக காரணம் காட்டி முதல் கட்டமாக நகராட்சியின் சார்பாக அந்த பகுதியில் மூன்று வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.
இதனை கண்டித்து நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், தூத்துக்குடி நகராட்சி துப்புரவு பணியாளர் சங்க தலைவருமான ஏசா துரை தலைமையில் அதிமுக நகர செயலாளர் அமிர்தகணேசன், வக்கீல் யூ.எஸ்.சேகர் மற்றும் பஸ்பர் கிணறு பகுதியை சேர்ந்த அருந்ததியர் பிரிவை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100 பேர் தூத்துக்குடி நகராட்சி ஆணையாளர் அறையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications