சிறுநீரக மோசடிக்கு உதவிய புரோக்கர் கைது
சென்னை: சென்னையில் உள்ள போலி டாக்டர் ரமேஷிடம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக ஆட்களை சேர்த்துவிட்ட சிறுநீரக புரோக்கர் பாஷாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, வடபழனி பகுதியில் அருண் பாலி கிளினிக் என்ற பெயரில் கிளினிக் நடத்தி வந்தவர் ரமேஷ். அதே பகுதியைச் சேர்ந்த சிறுநீரக புரோக்கர் பாஷா என்பவர் புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த உமாவை அணுகினார்.
கணவரின் மருத்துச் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வந்தார் உமா. இந்த நிலையில் சிறுநீரகத்தை விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என பாஷா கூறினார்.
இதை நம்பிய உமா, சிறுநீரகத்தை விற்க முன் வந்தார். இதற்கு ரூ. 2 லட்சம் தருவதாக உமாவிடம் உறுதியளித்தார் பாஷா. ஆனால் அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் பேசியபடி ரூ.2 லட்சத்தை கொடுக்காமல் 70,000 ரூபாயை மட்டும் கொடுத்து புரோக்கர் பாஷாவும், ரமேஷூம் ஏழைப் பெண் உமாவை ஏமாற்றிவிட்டனர்.
பாக்கி பணத்தை கேட்டதற்கு இழுத்தடித்ததால் அவர் சென்னை காவல் துறை ஆணையர் நாஞ்சில் குமரனிடம் புகார் செய்தார். இந்த புகாரை வைத்து ரமேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் டாக்டரே இல்லை என்று வெளிச்சத்துக்கு வந்தது.
பின்னர் ரமேஷை போலீஸார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
வடபழனியில் உள்ள ரமேஷின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் அவர் அக்குபஞ்சர் சிகிச்சை பார்த்ததற்கான சான்றிதழ் மற்றும் ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
ரமேஷிடம் 5 பகுதி நேர டாக்டர்கள் உள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த விசாரணையில் பாஷாதான் சிறுநீரக மோசடிக்கு ஆள் கூட்டி வந்து கொடுப்பார் என்று கூறியுள்ளார் ரமேஷ். இதையடுத்து பாஷாவை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பாஷா போலீஸ் பிடியில் சிக்கினார். அவரிடம் நடத்திய
விசாரணையில், உமாவின் சிறுநீரகத்தை இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் மகேஸ்வரன் என்பவருக்கு பொருத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.
இதற்காக உமாவை முகப்பேரில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு இலங்கை பிரஜைக்கு, இந்திய பெண்ணின் சிறுநீரகத்தை பொருத்த முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டதால், உடனே உமாவை, தொழிலதிபர் மகேஸ்வரன் இலங்கைக்கே அழைத்து சென்று தனது தங்கை என்று பொய் சொல்லி இலங்கை குடியுரிமை பெற்றுள்ளார்.
அதன் பின்பு இந்தியா வந்து முகப்பேரில் உள்ள அதே மருத்துவமனையில் வைத்து ஆபரேஷன நடந்துள்ளது. இந்த மோசடி செயலுக்கு முகப்பேரில் உள்ள டாக்டர்கள் சிலரும் துணை போயுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் முகப்பேரில் உள்ள அந்த மருத்துவமனையிலும் யார் யாருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்ற விவரம் கேட்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரத்தில் இலங்கை தொழிலதிபர் மகேஸ்வரனிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications