தொடர்ந்து கன மழை-மக்கள் அவதி, போக்குவரத்தும் பாதிப்பு
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல நகரங்களில் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கிராமப் பகுதிகளில் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் கன மழை பெய்ததால், வைகை அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்தது. முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் அங்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தஞ்சையிலும் இதே நிலைதான்.
சென்னை நகரில் மழையால் முக்கியச் சாலைகள் அனைத்தும் கணிசமான சேதத்தை சந்தித்துள்ளன. பள்ளம் ஏற்பட்டு அதில் மழை நீர் தேங்கிக் கிடப்பதால் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. வாகனங்களில் செல்வோர் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
வேளச்சேரி பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்து வீடுகளைச் சுர்றிலும் தேங்கிக் கிடப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வேலூரில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து பல பகுதிகளை நாறடித்துள்ளது.
தூத்துக்குடியில் மழை நீருடன் சாக்கடை நீர் சேர்ந்து வருவதைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பொதுமக்கள் சாக்கடைகளில் மீன்பிடித்துப் போராட்டம் நடத்தினர்.