கேரளாவுக்கு மீண்டும் மணல் கடத்தல் தொடங்கியது
திருநெல்வேலி: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மீண்டும் மணல் கடத்தல் தொடங்கியுள்ளது.
தமிழக நதிகளில் இருந்து கேரள மாநிலத்திற்கு தினமும் பல ஆயிரக்கனக்கான லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இம் மணல் கடத்தல் திருநெல்வேலி தாமிரபரணி, நம்பியாறு, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாகர்கோவில் வழியாகவும், தென்காசி-புளியரை வழியாகவும் ஏராளமான லாரிகளில் மணல் கடத்தல் நடந்து வந்தது.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து அரசு தீவிர கவனம் செலுத்தி ஏராளமான லாரிகளை பறிமுதல் செய்தது.
அதன்பின் சில மாதங்களாக மணல் கடத்தல் குறைந்திருந்தது. ஆனால் தற்போது மீண்டும் கேரளாவுக்கு டாரஸ் வாகனங்களில் மணல் கடத்தல் நல்லபடியாக நடந்து வருகிறது.
இந்த விஷயத்தில் லோக்கல் கரைவேட்டிகளுக்கு கமிஷன் வெட்டப்படுவதாலும், பல நேரங்களில் மணல் கடத்தலில் ஈடுபடுவதே கரை வேட்டிகள் என்பதாலும் இந்த விஷயத்தில் காவல்துறை எட்ட நின்று வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.
இந்த மணல் கடத்தலால் ஜீவ நதிகள் அனைத்தும் வறண்டு விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.