For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேது திட்டம்: மக்களை பாலு ஏமாற்றுகிறார்-ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சேது சமுத்திரத் திட்டப் பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துவிட்டதாக மத்திய அமைச்சர் பாலு கூறி வருவது உண்மைக்குப் புறம்பானது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு சேது சமுத்திர கால்வாய் திட்டத்தில் 70 சதவீத பணிகள் முடிந்து விட்டதாக உண்மைக்கு மாறாக கூறியுள்ளார். அப்படி என்றால் இதுவரை தோண்டிய கால்வாயின் மொத்த நீளம் எவ்வளவு? ஆழம் எவ்வளவு பணிகள் நிறைவேற்றப்பட்ட 70 சதவீத கால்வாயில் கப்பலை ஓட்டிக் காட்டத் தயாரா?

எத்தனை டன் எடையுள்ள கப்பல்கள் இந்த மேற்படி கால்வாய் வழியாக பயணிக்க முடியும்? என்று நான் எழுப்பிய வினாக்களுக்கு பாலு சரியாக பதில் அளிக்கவில்லை.

உண்மை நிலை இவ்வாறிருக்க சேது சமுத்திர கால்வாயில் அடுத்த ஆண்டு நவம்பர் முதல் கப்பல் இயக்கப்படும் என்றும் தொடக்க விழாவில் பிரதமர் மற்றும் சோனியா காந்தி, கருணாநிதி ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் பாலு தற்போது ஒரு கற்பனை எட்டாத புதுக்கதையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.

தற்போது சேது சமுத்திர திட்டத்தின் 15 விழுக்காடு பணிகளே முடிவடைந்துள்ளன என்றும் பாலு கூறுவதுபோல அடுத்த நவம்பர் மாதத்திற்குள் மீதமுள்ள 85 விழுக்காடு பணிகள் முடிவடைந்து விடும் என்பதும் சாத்தியமில்லாத ஒன்று என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடாவை இணைக்கும் ராமர் பாலத்தை பாக் விரிகுடா-பாக் ஜலசந்தி ஆகியவற்றின் வழியாக கடலில் 300 மீட்டர் அகலத்திற்கும் 12 மீட்டர் ஆழத்திற்கும் 167 கி.மீ. தூரத்திற்கும் கால்வாய் தோண்டுவதே இந்த திட்டத்தின் பணி.

இதில் 15 விழுக்காடு பணிகளே பூர்த்தியாகி உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் தற்போதுள்ள தடையை நீக்கி பணியை மேற்கொள்ள அனுமதித்தாலும், ஓர் ஆண்டில் 25 விழுக்காடு பணியைத்தான் முடிக்க முடியும் என்றும், எனவே இந்த திட்டம் நிறைவேற்றுவதற்கு இன்னும் 4 வருடங்கள் ஆகும் என்றும் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஒதுக்கிய நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் மேற்படி துறை சுட்டிக் காட்டியுள்ளது.

நிலைமை இவ்வாறிருக்க, மத்திய அமைச்சரான பாலு நிறைவேற்ற முடியாத ஒரு திட்டத்தை ஒரு வருடத்தில் நிறைவேற்றப் போகிறோம் என்று குரல் கொடுப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

உண்மை நிலையை தெரிந்து கொண்டு வேண்டுமென்றே மக்களை ஏமாற்றுகிறாரா? அல்லது உண்மை நிலை அவருக்கு தெரிந்தும் பேசுகிறாரா?

150 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட வேண்டிய இந்த திட்டம் இப்போது நிறைவேற்றப்பட்டால் பொருளாதார ரீதியாக அது தமிழகத்திற்கு பயனிக்குமா? மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காதா? சுற்றுச் சூழலுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமா?

அதிக எடை கொண்ட நவீன கப்பல்கள் சேது சமுத்திர கால்வாய் வழியாக செல்வதற்கு சாத்தியம் உண்டா? என்பதைப் பற்றி எல்லாம் துளி கூட யோசிக்காமல், கடிவாளம் போடப்பட்ட குதிரையைப் போன்று சுய லாபத்தையே குறிக்கோளாகக் கொண்டு திரும்பத் திரும்ப மக்களை குழப்பி தவறான உண்மைக்கு மாறான போலி வாதங்களை முன் வைத்து தொடர்ந்து உண்மையை மூடி மறைக்கும் செயலில் ஈடுபடும் பாலுவின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

மத்திய அரசே இந்த திட்டம் குறித்து சில ஐயப்பாடுகளை தெரிவித்துள்ள நிலையில் இதற்கு பாலுவும், கருணாநிதியும் என்ன சொல்லப் போகிறார்கள் என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X