தூத்துக்குடியில் 1,600 மெகாவாட் புதிய மின் நிலையம்
சென்னை: தூத்துக்குடியில் 1,600 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியமும், பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனமும் (பிஎச்இஎல்) இணைந்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1,600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளன.
இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. முதல்வர் கருணாநிதி, மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் மோகன்தேவ், தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா, பிஎச்இஎல் தலைவர் அசோக் பூரி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தலா 800 மெகாவாட் திறன் கொண்ட இரு மின் உலைகள் உடன்குடியில் அமைக்கப்படும்.
இத்திட்டத்தில் உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் குறைந்த அளவில் நிலக்கரி பயன்படுத்தப்படும்.
2011ம் ஆண்டில் இத்திட்டம் செயல்படத் தொடங்கும். உடன்குடி கிராமத்தில் 938 ஏக்கர் பரப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இந்த மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. கடற்கரையை ஒட்டியே இத்திட்டம் அமையவுள்ளதால், இதன் அருகிலேயே நிலக்கரியைக் கையாளுவதற்குத் தேவையான துறைமுகம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications