சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை-தடுக்க கடும் சட்டம்
திருநெல்வேலி: சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க கடும் சட்டம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து வருவதாக தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா கூறியுள்ளார்.
பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டுபிடிப்பது மற்றும் தடுப்பது குறித்து ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு அமைச்சர் பூங்கோதை தலைமை வகித்தார். மருத்துவமனை டீன் விநாயகம் முன்னிலை வகித்தார். கருத்தரங்கை துவக்கி வைத்து அமைச்சர் பூங்கோதை பேசியதாவது,
குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறைகள் உலகம் முழுவதும் நிலவிவரும் ஒரு பிரச்சனையாகும். ஆரம்ப காலம் முதலே இது போன்ற பிரச்சனைகள் இருந்து வருகிறது. தற்போது மக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்சனைகள் மூலம் குழந்தைகள் பாலியல் ரீதியாகவும், மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் இப்பிரச்சனை தற்போது அதிகமாக உள்ளது. காரணம் பாலியல் கல்வி குறித்து நாம் பேச தயங்குகிறோம்.
இவ்வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து கடுமையான சட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமும் சமூக அக்கரையுடன் செயல்பட வேண்டும். நடந்த பின் ஆராய்வதை விட நாம் வரும் முன்காப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு முதல்வரின் தனிப்பிரிவு அமைப்பதற்கான ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications