5 ரேடியோ நிறுவனங்களுக்கு இலங்கை அரசு திடீர் தடை
கொழும்பு: விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்த செய்தியை ஒலிபரப்பிய ஐந்து ரேடியோ நிறுவனங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
இந்த ரேடியோ நிறுவனங்கள் அனைத்தும் ஏபிசி குழுமத்திற்குச் சொந்தமானவை.
இதுகுறித்து இலங்கை செய்தித்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சனா யப்பா கூறுகையில், ஏபிசி குழுமத்தைச் சேர்ந்த இந்த ஐந்து ரேடியோ நிறுவனங்களும் தவறான தகவல்களைப் பரப்பியதாக தகவல்கள் வந்தன.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமம் திரும்பப் பெறப்பட்டது. ஐந்து ரேடியோ நிறுவனங்களின் ஒலிபரப்பும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏபிசி நிறுவனத்தின் ரேடியோ நிறுவனங்கள், இலங்கையின் தெற்கில் உள்ள திச்சமஹரமா என்ற இடத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக செய்தி ஒளிபரப்பின.
இதையடுத்து அங்கு ராணுவமும், போலீஸாரும் விரைந்தனர். ஆனால் உண்மையில் அங்கு எந்த வித தாக்குதலும் நடைபெறவில்லை என்று தெரிய வந்தது.
இதையடுத்து தவறான செய்தியை ஒலிபரப்பியதற்காக இந்த ரேடியோ நிறுவனங்களின் ஒலிபரப்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமைச்சர் ஒருவர் தன்னை செய்தித்தாள் ஒன்றின் செய்தியாளர் மிரட்டுவதாக கூறிய புகாரின் பேரில் அந்த செய்தியாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த இரு சம்பவங்களையும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன. பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கும் செயல் இது. தங்களுக்கு எதிராக எழும் குரல்களை ஒடுக்க அரசு முயல்வதையே இது காட்டுகிறது ென்று சுதந்திர மீடியா இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுனந்தா தேசப்ரியா கூறியுள்ளார்.
தங்கள் மீதான பெரும்பாலான தாக்குதல்களை ராணுவம் இருட்டடிப்பு செய்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications