அதிமுக எம்பியிடம் நூதன கொள்ளை
திருச்சி: ஜவுளி எடுக்க வந்த அதிமுக எம்பியிடம் சூட்கேஸ் திருடப்பட்டது.
அதிமுகவின் ராஜ்யசபா எம்பி இளவரசன். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் உள்ள ஒரு பிரபல கடைக்கு துணி எடுக்க வந்தார்.
தனது சூட்கேஸை காரில் வைத்து விட்டு துணிமணிகளை எடுத்த பின்னர் தனது காருக்கு திரும்பினார். அப்போது அங்கு வந்த ஒருவன், 10 ரூபாய் நோட்டுகளை கீழே போட்டுவிட்டு, 'சார் இந்த பணமெல்லாம் உங்களுடையதா' என்று கேட்டுள்ளான்.
பணத்தை பார்த்த அவர் அதை குனிந்து கீழே எடுக்கும் முன், காருக்குள் இருந்த சூட்கேஸை அந்த ஆசாமி திருடிச் சென்றான். எம்பி இளவரசன் பணத்தை பொறுக்கிய பின் காருக்குள் திரும்பிப் பார்த்தபோது தன் சூட்கேஸை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இது தொடர்பாக போலீசில் புகார் செய்தார். திருச்சி நகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளித்த போலீசார் சூட்கேசுடன் தனியாக செல்லும் ஆசாமியை பிடித்து விசாரிக்கும்படி கூறினர்.
இந் நிலையில் தில்லைநகர் பகுதியில் ஒரு சூட்கேஸ் அனாதையாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதை கைப்பற்றிய போலீசார் திறந்து பார்த்த போது அதிமுக எம்பியின் அடையாள அட்டை, கிரடிட் கார்டு, விமான டிக்கெட் போன்றவை இருந்தன.
சூட்கேஸை திருடி சென்றவன் அதில் பணம் இல்லாததால் சூட்கேஸை எறிந்துவிட்டு சென்றுள்ளான்.












Click it and Unblock the Notifications