தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை
சென்னை: தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவ மழை தமிழகம் முழுவதும் வேகமடைந்துள்ளது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்த மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. லட்சக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
பல ஊர்களில் குளங்கள், கண்மாய்கள் உடைப்பெடுத்துள்ளன. அணைகள் நிரம்பி வழிகின்றன. காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் மழை பாதிப்பு அதிகம் உள்ளது.
இந்த நிலையில் சென்னை நகரில் நேற்று முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று காலை முதல் சென்னையில் மழை பெய்தது. மாலையில் கன மழை பெய்தது. வட கிழக்குப் பருவ மழை தொடங்கிய பின்னர் நேற்று சென்னையில் மிக கனத்த மழை பெய்தது.
இந்த மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது. சாலைகள் அரிப்பெடுத்துப் போய் விட்டன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை நகரம் மட்டுமல்லாது புறநகர்களிலும் கூட நல்ல மழை பெய்துள்ளது. நேற்று நகரில் 13.2 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது.
கடலூரில் ...
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. மணிமுத்தாறில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. வெள்ளாற்றின் கரை ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விருத்தாச்சலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி தரைப் பாலம் வெள்ளத்தில் சிக்கி உடைந்து விட்டது. இதனால் 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சிப்பாடி அருகே சிவசங்கரன் என்ற சிறுவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
கொடைக்கானலில் நிலச்சரிவு ..
கனத்த மழைக்கு கொடைக்கானலில் மண் சரிவும், நிலச்சரிவும் ஏற்பட்டது. டம் டம் பாறையின் மேல் பகுதியில் உள்ள நண்டான்கரை என்ற இடத்தில் நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்படச்டது.
அப்போது அந்தப் பாதை வழியாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் காரில் வந்தார். அவரது காரும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. சுமார் அரை மணி நேரம் அவர் போக்குவரத்து சிக்கலில் மாட்டிக் கொண்டார்.
தகவல் அறிந்ததும் தேனி மாவட்ட திமுக செயலாளர் மூக்கையா தனது காரில் சென்று, அமைச்சரை பெரியகுளத்திற்கு அழைத்துச் சென்றார். பிற்பகல் 2 மணிக்கு மேல் அங்கு போக்குவரத்து சீரடைந்தது.
மேலும் 2 நாட்களுக்கு ..
தமிழகம் முழுவதும் பெய்து வரும் கன மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த புயல் சின்னம் அரபிக் கடலுக்குப் போய் விட்டது என்ற போதிலும் கூட பருவமழை தீவிரமடைந்திருப்பதால் தென் மாவட்டங்களிலும், கடலோரத் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications