நாஞ்சில் சம்பத் சிறையில் தாக்கப்படவில்லை-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil


சென்னை: நாஞ்சில் சம்பத்தை மதுரை சிறையில் யாரும் தாக்கியதாக தெரியவில்லை. ஆனால், வைகோ தான் அவர் தாக்கப்பட்டதாகக் கூறுகிறார் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

மதிமுகவைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் எல்லா பொதுக் கூட்டங்களிலும் என்னை மகா மட்டமாக விமர்சித்துப் பேசி வருவதாக பல முறை எனக்கு புகார்கள் வந்தன. சட்டத் துறையில் இருந்தும் அவர் பேச்சு பற்றிய கோப்புகள் வந்தன.

ஆனால் நான் அவற்றை எல்லாம் அலட்சியப்படுத்துக என்று குறிப்பு எழுதி நிராகரித்து விட்டேன். இந் நிலையில் கடந்த 24ம் தேதி வத்தலகுண்டு நகரில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் என்னை மிகவும் கேவலமாக பேசியிருக்கிறார்.

இதனால் அங்கு பிரச்சினை ஏற்பட்டு கலவரம் நடந்துள்ளது. இது தொடர்பாக உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

கலாட்டாவில் ஈடுபட்ட திமுகவினர் மீதும் புகார் கூறப்பட்டது. வேடச்சந்தூர் மதிமுக செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் 100 திமுகவினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாஞ்சில் சம்பத் பேசிய பேச்சை எல்லா கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி உள்ளோம் என்றார் கருணாநிதி. பின்னர் கேள்விகளுக்கு அவர் தந்த பதில்,

கேள்வி: நாஞ்சில் சம்பத் மதுரை ஜெயிலில் தாக்கப்பட்டுள்ளதாக வைகோ கூறியுள்ளாரே?

பதில்: வைகோதான் அப்படி கூறுகிறார். யாரும் தாக்கியதாக தெரியவில்லை. இது தொடர்பான இலாகாவிடம் விசாரித்த போதும் நாஞ்சில் சம்பத் தாக்கப்படவில்லை என்று கூறினார்கள். என்றாலும் அவர் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கேள்வி: நாஞ்சில் சம்பத் இவ்வளவு கேவலமாக பேசுவதை வைகோ ரசிக்கிறாரே?

பதில்: நாங்கள் எங்கள் கட்சியில் யாராவது மோசமாக பேசினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். நெல்லையில் எங்கள் கட்சி பேச்சாளர் வாகை முத்தழகன் எதிர்க்கட்சிகளை மிக மோசமாக தாக்கி பேசினார் என்று தெரிந்ததும் அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.

கேள்வி: சேது சமுத்திர திட்டம் நிச்சயம் வரும் என்று டி.ஆர்.பாலு சொல்கிறார். வராது என்று ஜெயலலிதா சொல்கிறார். இந் நிலையில் ஆய்வு கமிட்டியால் பயன் இருக்குமா?

பதில்:எப்படி அது பயனில்லாமல் போகும். 6வது பாதை சரியா அல்லது சரி இல்லையா என்று அந்த கமிட்டியில் கருத்து சொல்ல முடியுமே. வாஜ்பாய் போன்ற அறிவாளிகள் தேர்வு செய்த வழிதான் இந்த 6வது வழி. பாஜக அமைச்சர்களும் இதை ஆதரித்தனர்.

ஆனால் திடீரென ராமர் வந்து விட்டதால் பிரச்சினையாகிவிட்டது. கிருஷ்ணா என்ற பெயர் இருப்பதால் கிருஷ்ணா நதி நீர் நமக்கு வேண்டாம் என்று சொல்கிறோமா? இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி இந்த திட்டத்தை கெடுப்பதை அந்த திட்டத்தினால் மிகுந்த பயனை எதிர்பார்க்கும் மக்கள் இழக்கத் தயாராக இல்லை.

கேள்வி: தமிழக அமைச்சரவையில் ஏன் திடீர் இலாகா மாற்றம் செய்யப்பட்டது?

பதில்: அது அந்த அமைச்சரின் செளகரியத்துக்காகவும், முதலமைச்சரின் வசதிக்காகவும் மாற்றம் செய்யப்படுகிறது.

கேள்வி: கனிமொழி மத்திய அமைச்சராவாரா?

பதில்: எப்போதாவது ஆவார்.

கேள்வி: நரேந்திர மோடி தொடர்பாக தெஹல்கா பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளதே?

பதில்: பத்திரிகைகளில் அதுபற்றி படித்துக் கொண்டி ருக்கிறேன். பிறகு என் கருத்தை சொல்கிறேன்.

கேள்வி: அடுத்த தேர்தலில் பாமக தலைமையில் புதிய அணி அமைக்கப்படும் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளாரே?

பதில்: இதுபற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+