மோடியால் உலகளவில் நாட்டுக்கு களங்கம்-காங்கிரஸ்
சென்னை: இந்தியாவின் பெருமைக்கு உலகளவில் களங்கம் கற்பிக்கும் வகையில் மத வெறியுடன் செயல்பட்டு வரும் நரேந்திர மோடியின் அரசியல் முகமூடி தெஹல்கா மூலம் கிழித்தெறியப்பட்டிருக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தெஹல்காவின் வீடியோ மூலம் பாஜகவின் மதவெறி அரசியல் மீண்டும் அம்பலத்திற்கு வந்துள்ளது. இதன்மூலம் பாஜகவின் சுயரூபம் தோலுரித்து காட்டப்பட்டுள்ளது. கடந்த 2002ல் நாட்டையே உலுக்கிய கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை பயன்படுத்தி குஜராத் மாநிலம் முழுவதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
இதில் 2,000க்கும் மேற்பட்ட சிறுபான்மை இனத்தை சேர்ந்த அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கோர சம்பவத்தை நிகழ்த்தியதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நேரடி பங்கு இருப்பது தெஹல்கா வீடியோ மூலம் இன்று வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த வீடியோ சாட்சியங்கள் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய படுகொலையை நிகழ்த்தியவர்களுக்கு ஆதரவு கொடுத்த நரேந்திர மோடி உடனடியாக பதவி விலக வேண்டும்.
மோடியின் மதவெறி காரணமாகத்தான் அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப் பயணம் செய்ய விசா கேட்டபோது அந்த நாடு அவருக்கு விசா வழங்க மறுத்துவிட்டது.
இந்தியாவின் பெருமைக்கு உலகளவில் களங்கம் கற்பிக்கும் வகையில் மத வெறியுடன் செயல்பட்டு வரும் நரேந்திர மோடியின் அரசியல் முகமூடி தெஹல்கா மூலம் இன்றைக்கு கிழித்தெறியப்பட்டிருக்கிறது.
நரேந்திர மோடியின் அரசியலுக்கு முடிவு கட்டும் வகையில் அம்மாநில மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி என்று கூறியுள்ளார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications