தெஹல்கா ஆபரேஷன்: டிவி சானல்கள் இருட்டடிப்பு!
அகமதாபாத்: குஜராத் கலவரம் குறித்த தெஹல்கா பத்திரிக்கையின் ஸ்டிங் ஆபரேஷன் குறித்த செய்தியை ஒளிபரப்பிய ஆங்கில-இந்தி சேனல்களை அம் மாநில அரசு இருட்டடிப்பு செய்துள்ளது.
குஜராத் கலவரம் குறித்த பல பரபரப்புத் தகவல்களுடன் கூடிய ஸ்டிங் ஆபரேஷனை தெஹல்கா இதழ் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆபரேசனை தெஹல்காவுடன் இணைந்து நடத்திய இந்தியா டுடேவின் ஹெட்லைன்ஸ் டுடே டிவி மற்றும் அதன் இந்தி டிவியான ஆஜ் தக் ஆகியவையும் நேற்று முதல் குஜராத் முழுவதும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.
அதே போல இந்த செய்திகளை வெளியிட்ட சிஎன்என்-ஐபிஎன், டிவி 18 ஆகிய டிவிக்களின் ஒளிபரப்பும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
செய்திகள் இல்லாத பிற சானல்கள் மட்டும் தெரிந்தன.
சர்ச்சைக்குரிய செய்திகள், குறிப்பாக மோடிக்கு எதிரான செய்திகள் வந்தால், உடனடியாக அந்த சேனல்களை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கட் செய்து விடுவது குஜராத்தில் வழக்கமாக உள்ளது.
சமீபத்தில் கரண் தாப்பர் நரேந்திர மோடியை பேட்டி கண்டபோது கலவரம் குறித்து கேட்க கோபமடைந்த மோடி பாதியில் எழுந்து சென்றுவிட்டார். அந்தப் பேட்டி ஒளிபரப்பானபோதும் அந்த சேனலின் ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது.
குஜராத்தில் சிட்டி கேபிள் மற்றும் அந்தரிக்ஷ் என இரு பெரிய கேபிள் டிவி நிறுவனங்கள் உள்ளன. இவைதான் குஜராத் முழுவதும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களைக் கட்டுப்படுத்துகின்றன.
சேனல்கள் தெரியாதது குறித்து அந்த நிறுவனங்கள் கூறுகையில், 'தொழில்நுட்பக் கோளாறு' காரணமாக அந்த சேனல்களை காட்ட முடியாமல் போனதாக கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications