ஜெ. வழக்கு பெங்களூர் கோர்ட்டில் ஒத்திவைப்பு
பெங்களூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை டிசம்பர் 15ம் தேதிக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கையும், லண்டன் ஹோட்டல் வழக்கையும் சேர்த்து விசாரிக்க கூடாது என்று கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது. இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு நீதிபதி மனோலி முன்னிலையில் பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு விசாரணையை டிசம்பர் 15ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தினகரன் தரப்பில் வக்கீல் யாரும் ஆஜராகவில்லை. இதை நீதிபதி கண்டித்திருந்தார். தினகரன் அல்லது அவரது சார்பில் வக்கீல் ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி நேற்று தினகரனின் வக்கீல் மூர்த்தி ராவ் ஆஜராகியிருந்தார்.