ஜாதி ரீதியாக சமுதாயத்தைப் பிரித்தவர் காந்தி: மாயாவதி
சண்டிகர்: சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த மக்களை இணைக்கப் பார்த்தவர் அம்பேத்கர். ஆனால் ஜாதி ரீதியாக சமூகத்தைப் பிரித்தவர் காந்தி என்று உ.பி. முதல்வர் மாயாவதி கூறியுள்ளார்.
சண்டிகர் வந்த மாயாவதி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், காந்தியும், அம்பேத்கரும் இரு வேறு பாதையில் நடந்தவர்கள். சமூகத்தில் நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த மக்களை ஒன்றுபடுத்தி இணைக்க முயன்றார் அம்பேத்கர்.
ஆனால் ஒடுக்கப்பட்ட நிலையில், உரிமைகளற்று கிடந்த மக்களுக்கு ஹரிஜன் என்ற பெயர் கொடுத்து சமூகத்தில் பிரிவினையை உருவாக்கியவர் காந்தி.
இரு தலைவர்களுக்கும் பல சிந்தனைகள் ஒரே மாதிரியாக இருந்தபோதிலும், அம்பேத்கர் ஒருபோதும் சமுதாயத்தைப் பிரிக்க நினைத்ததில்லை. அந்த சிந்தனை அவருக்கு ஒருபோதும் வந்ததில்லை.
இதுதொடர்பாக பலரும் அம்பேத்கரை வலியுறுத்தினர், வற்புறுத்தினர். ஆனால் அனைத்து சமுதாயத்தினரும் சமமானவர்களே என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர் அம்பேத்கர். அப்படிப்பட்ட சமுதாயம்தான் வர வேண்டும் என்பதிலும் அவர் பிடிவாதமாக இருந்தார்.
காந்தியடிகள் உருவாக்கிய ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்) என்ற வார்த்தையே தவறானது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. இதனால்தான் நான் உ.பியில் ஆட்சிக்கு வந்ததும், அரசு அலுவலகங்களில் ஹரிஜன் என்ற வார்த்தையை நீக்கி விட்டு தலித் என்ற வார்த்தை மட்டுமே இடம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டேன் என்றார் மாயாவதி.
காந்தியடிகள் குறித்து மாயாவதி கூறியுள்ள இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications