அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் விரைவாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
மழை காரணமாக ஆங்காங்கே மக்கள் பாதிக்கப்பட்டுள்ள விவரங்கள் தமது கவனத்துக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவுபடுத்திடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும், மழை வெள்ளம் காரணமாக மனித உயிர்களுக்கும், கால்நடைகளுக்கும், பயிர் வகைகளுக்கும் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை மதிப்பிட்டு அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும், உடனடியாக மாவட்டங்களுக்குச் சென்று பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை வழங்குமாறு அமைச்சர்களுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் உத்தரவுப்படி, அமைச்சர்கள் பார்வையிடும் மாவட்டங்கள்:
தஞ்சை - கோ.சி.மணி, எஸ்.என்.உபையதுல்லா.
விழுப்புரம் - பொன்முடி.
கடலூர் - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.
கோவை - பொங்கலூர் பழனிச்சாமி.
காஞ்சிபுரம் - தா.மோ. அன்பரசன்.
கன்னியாகுமரி - சுரேஷ்ராஜன்.
ராமநாதபுரம் - சுப.தங்கவேலன்.
ஈரோடு - என்.கே.கே.பி.ராஜா.
நெல்லை - பூங்கோதை ஆலடி அருணா.
தூத்துக்குடி - கீதா ஜீவன்.
திருவள்ளூர் - கே.பி.பி.சாமி.
திருவாரூர், நாகை - உ.மதிவானன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.