தொழிலாளர்கள் கோஷ்டி மோதலில் 2 பேர் பலி
சென்னை: சென்னை அருகே வடமாநிலத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையை அடுத்துள்ள பீர்க்கண்கரணையில் ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனி இருந்த இடத்தில் தற்போது ஸ்ரீராம் குழுமம் சார்பாக மிகப்பெரிய வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டிடம் கட்டும் பணியை டெல்லியை சேர்ந்த கட்டட நிறுவனம் ஒன்று காண்ட்ராக்ட் எடுத்துள்ளது. இந்த நிறுவனம் ஒரிசா மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கட்டட பணிக்காக அமர்த்தியுள்ளது.
நேற்று நள்ளிரவில் ஒரிசாவை சேர்ந்த சுரேந்தர்மெளலி (40) என்பவர் குடிபோதையில், இரும்புக் குழாயை எடுத்து தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களை தாக்க ஆரம்பித்தார். இதில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி உம்பிரீஷ் மொண்டல் (45) படுகாயமடைந்தார்.
இதையடுத்து பீகார் மற்றும் ஒரிசாவை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் ஒருவரையொருவர் பாட்டில், கட்டை மற்றும் கற்களால் தாக்கிக் கொண்டனர்.
மோதல் பற்றிய தகவல் தெரிந்தவுடன் இன்ஸ்பெக்டர் தேவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் தலைமைக் காவலர்கள் ராம்குமார், முரளி ஆகியோர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதனப்படுத்த முயன்றனர்.
ஆனால் தொழிலாளர்கள் சமாதானம் செய்ய வந்த போலீசாரையும் தாக்கினர். இதில் நான்கு போலீஸாரும் காயமடைந்தனர். இதையடுத்து கூடுதல் போலீஸ் படை வரவழைக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து கட்டடத் தொழிலாளர்களை அடக்கினர். பின்னர் காயமடைந்த நான்கு போலீஸாரும், தொழிலாளர்கள் சுரேந்தர் மெளலி, உம்பிரீஷ் மொண்டல், ராஜு, உம்ப்ரீஷ் பூரி ஆகியோரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இதில் மெளலியும், மொண்டலும் இறந்து விட்டனர். போலீஸார் உள்ளிட்ட மற்ற 6 பேரும் சிகிச்சை பெற்றனர்.
இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications