அரசு விழாவுக்கு வராத திமுக எம்.எல்.ஏ
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த அரசு விழாவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ வராததால் சலசலப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஊர்வசி செல்வராஜ் தொகுதிக்கு அரிதாகத்தான் வருகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 4ம் கட்டமாக, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் விழா மற்றும் அவர்களுக்கு குறுகிய கால தொழிற்பயிற்சி அளிக்கும் திட்ட தொடக்க விழா ஸ்ரீ வைகுண்டம் குருசுகோவில் வாளகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் கலெக்டர் பழனியாண்டி தலைமை வகித்தார். விழாவில் 450 வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகையாக ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்து 500ஐ அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
இந்த விழாவில் எம்.எல்.ஏ என்ற முறையில் நிச்சயமாக ஊர்வசி செல்வராஜ் வருவார் என்ற நம்பிக்கையில் பொது மக்கள் மனுக்களுடன் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் விழா தொடங்கி, தேசியகீதம் பாடி முடியும் வரை அவர் வரவில்லை.
இதனால் விலாநோக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் அதிர்ச்சியும் அடைந்தனர். விழாவில், அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்,
அனைத்து விலைகளும் உயர்ந்தாலும் தமிழகத்தில் அரிசி விலை மட்டும் உயரவில்லை.
கருணாநிதி முதல்வராக பதவியேற்ற பின்னர் இதுவரை ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் 40 வயது முடிந்த பலர் பயனடைந்துள்ளனர். மேலும் சேது சமுத்திர திட்டம் நிறைவேறும் பட்சத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் ஒரே நாளில் 2 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அத்திட்டம் தூத்துக்குடியில் செயல்படுமானால் துறைமுகத்தில் 10.1 மில்லியன் சரக்குகள் கையாளப்படும். இதில் ஒரு மில்லியன் சரக்குகளை கையாள்வதற்கே 200 ஆட்கள் தேவைப்படுவார்கள்.
எனவே சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் ஒரே நாளிலேயே 2 பேருக்கு வேலை வாய்ப்பு நேரடியாக கிடைக்கும். இது தவிர மறைமுக வேலை வாய்ப்புகள் பெருகும்.
கருணாநிதி முதல்வராக பதவியேற்ற பின்பு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். இரண்டு ரூபாய்க்கு அரிசி கொடுக்க முடியாது என்று கூறியவர்களுக்கு இன்று வரை 2 ரூபாயிலேயே அரிசி வழங்கி அவர்களுக்கு பதிலளித்து விட்டார்.
மற்ற பொருட்களின் விலை உயர்ந்தாலும் அரிசி விலை இன்னும் உயரவில்லை. 5 வருடங்கள் ஆட்சி பொறுப்பை எங்களிடம் கொடுத்துள்ள நிலையில் ஒரே வருடத்திலேயே தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீகிதத்தை கருணாநிதி நிறைவேற்றி விட்டார் என்றார் அவர்.