சிங்கத்திற்கு இணையான அதிமுக தொண்டர்கள்: ஜெ.
சென்னை: அதிமுக தொண்டர்கள் பிடறி சிலிர்த்து கர்ஜிக்கும் சிங்கத்திற்கு இணையானவர்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில், இன்று நடந்த அதிமுக நிர்வாகிகளின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு ஜெயலலிதா பேசுகையில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் அசைக்க முடியாத அன்பாலும், பாசத்தாலும் பிணைக்கப்பட்டு வலுவாக இருப்பதுதான் நமது உறவு.
பிடறி சிலிர்த்து கர்ஜிக்கும் சிங்கத்திற்கு இணையான தொண்டர் படை கூட்டமும், வீரர் பட்டாளங்களையும், பொய்மையை தோற்கடித்து உண்மை என்னும் ஆயுதம் ஏந்தி தேர்தல் களத்தில் சலிக்காது போர் தொடுக்கும் போராளிகளாகவும் நமது தொண்டர்கள் விளங்கி வருகிறார்கள்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதிமுகவின் 36வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடி மகிழ்ந்தோம். தமிழ்நாட்டில் கடந்த 17 மாதங்களாக திமுக அரசு நடந்து வருகிறது. இந்த அரசால் பொதுமக்களுக்கு எந்தவித ஏற்றமும் கிடைக்கவில்லை. மாறாக ஏமாற்றமே கிடைத்து வருகிறது. இதனால் தமிழ்நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
மேலும், கருணாநிதி மத்திய அரசில் அங்கம் வகித்துக் கொண்டு, தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சனைகளான காவேரி நதி நீர் பங்கீடு, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துதல் மற்றும் பாலாற்றின் குறுக்கே கட்டப்படுகின்ற அணையை தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சரியான முறையில் கையாளத் தவறி விட்டார்.
இது போன்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தொண்டர்களாகிய நீங்கள் தொடர்ந்து மக்களுக்கு தொணடாற்றுங்கள். எல்லா ஆற்றல்களும் உங்களுக்குள்ளே குடி கொண்டிருக்கிறது. உங்களால எதையும் சாதிக்க முடியும் என்றார் விவேகானந்தர்.
இந்த வைர வரிகளை சரியாக புரிந்துகொண்டு உங்கள் திறமையை, உழைப்பை ஆற்றல்களை மொத்தமாக திரட்டி மக்களுக்காக பணியாற்றுங்கள். உழைப்பையும், தியாகத்தையும் கழகத்திற்கு தாருங்கள். அது வெற்றியை தேடித்தரும். அதன் மூம் எம்ஜிஆரின் ஆசியுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம். மக்களுக்கு பொற்கால ஆட்சியை கொடுப்போம் என்று ஜெயலலிதா பேசினார்.












Click it and Unblock the Notifications