பாதியில் முடிந்த பாமக உண்ணாவிரதம்
திருநெல்வேலி: நெல்லையில் பாமகவினர் நடத்தவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் கூட்டம் சேராததால் பாதியிலேயே கைவிடப்பட்டது.
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் பாதிக்கப்பட்ட கூத்தன்குளி மீனவர்கள் தற்காலிக குடியிருப்புகளில் தங்கி உள்ளனர். இவர்கள் 70 குடும்பத்தினருக்கும் தற்போது தங்கியிருக்கும் இடத்தையே நிரந்தரமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அத்துடன் முக்கூடல் பேரூராட்சி சுகாதார வாளகத்தை மீண்டும் மகளிர் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மகளிர் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த இரு பிரச்சனைகளை முன்வைத்து பாமக மற்றும் கூத்தன்குளி மீனவர் சங்கம் சார்பில் பாமக மாநில மகளிர் சங்க செயலாளர் சிலம்பு செல்வி தலைமையில் நெல்லை வண்ணார்பேட்டையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் இரு நபர்கள் மட்டுமே வந்திருந்தனர். இதனால் உண்ணாவிரதம் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் அங்கு ஆட்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்தச் சூழ்நிலையில், கொஞ்சம் போல ஆட்கள் வரத் தொடங்கினர். உண்ணாவிரத பந்தலுக்குள் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். தொலைக்காட்சி மற்றும் புகைப்படக்காரர்களுக்கு உண்ணாவிரதம் இருப்பது போன்று போஸ் கொடுத்தனர்.
பின்னர் திடீரென அனைவரும் கலைந்து சென்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க வந்தவர்கள் எந்த அறிவிப்பும் இல்லாமல் கலைந்து சென்றதால் கூடியிருந்த சொற்ப தொண்டர்களிடம் அதிருப்தி ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications