கொழும்பு டூ கோவைக்கு நாளை முதல் புது விமான சேவை
துபாய்: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை நகருக்கு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 29ம் தேதி (நாளை) முதல் புதிய விமான சேவையை தொடங்குகிறது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இந்தியாவில் விமான சேவையை மேற்கொள்ளும் 11வது நகரம் கோவை.
இதுகுறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் ஹில் கூறுகையில், இந்தியாவுக்கான நுழைவாயிலாக கொழும்பு நகரை நாங்கள் கருதுகிறோம். இதனால்தான் கொழும்பிலிருந்து இந்தியாவுக்கு அதிக விமான சேவையை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த பட்டியலில் தற்போது கோவையும் சேர்ந்துள்ளது. மேலும் பல இந்திய நகரங்களும் எங்களது சேவையில் இணையவுள்ளன.
தொடக்கத்தில் வாரம் நான்கு முறை (திங்கள், வியாழன், வெள்ளி, சனி) கொழும்பு - கோவை இடையே விமான சேவை மேற்கொள்ளப்படும். தென்னிந்தியாவில் ஏற்கனவே சென்னை, திருச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி ஆகிய நகரங்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சேவை உள்ளது என்றார் ஹில்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடந்த ஏப்ரல் 2006 - மார்ச் 2007 கால கட்டத்தில் 10 லட்சம் இந்திய பயணிகளுக்கு கையாண்டு சேவையாற்றியுள்ளதாகவும் ஹில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தங்களது ஊரைப் புறக்கணித்து விட்டு கோவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக, மத்திய அரசைக் கண்டித்து கோழிக்கோட்டில் நேற்று பொது வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. கோழிக்கோட்டில் உள்ள காரிப்பூர் விமான நிலையத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.