நீதிமன்ற அவமதிப்பு வழக்கு-கருணாநிதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக கடந்த 1ம் தேதி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் உண்ணாவிரதம் என்ற பெயரில் பந்த் நடத்தியதாக அதிமுக தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மாநில அமைச்சர் ேநரு, தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதே நேரத்தில் இவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ேவண்டியதில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 1ம் தேதி பந்த் நடத்த திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் திட்டமிட்டன. ஆனால் இதை எதிர்த்து அதிமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த பந்த்துக்கு தடை விதித்தது.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் மட்டுமே நடந்தாலும் தமிழகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு, பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. கடைகள் அடைக்கப்பட்ட, பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டன, வாகனங்கள் இயங்கவில்லை.
இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தமிழகத்தில் பந்த் நடந்துள்ளதாகவும், முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக அவசர மனு தாக்கல் செய்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. தமிழக அரசை ஏன் கலைக்கக் கூடாது என கேள்வி எழுப்பியது.
இதையடுத்து தனது உண்ணாவிரதத்தை பாதியிலேயே முடித்து கொண்ட முதல்வர், தமிழகத்தில் பந்த் நடக்கவில்லை என்று அறிவித்தார்.
இந்நிலையில் அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அகர்வால், நோலேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குருகிஷண் குமார், இந்த நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி பந்த் நடத்தப்பட்டுள்ளது எனறார்.
அப்போது பேசிய நீதிபதிகள், மாநில அரசு எந்த வகையில் நீதிமன்றத்தை அவமதித்து என்று கேட்டனர்.
இதற்கு பதிலளித்த குமார், நீதிபதிகளையே விமர்சிக்கும் வகையில் மத்திய அமைச்சர் பாலு பேசினார். நீதிபதிகள் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார் என்றார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், எங்கள் மீது கண்டன தீர்மானம் கொண்டு வந்துவிட்டுப் போகட்டும். அப்படி பேசுவதெல்லாம் நீதிமன்ற அவமதிப்பாகாது என்றார்.
இதையடுத்துப் பேசிய வழக்கறிஞர் குமார், தமிழகத்தில் உள்ள 18,000 அரசு பேருந்துகளில் வெறும் 61 பேருந்துகள் தான் இயங்குவதாக தலைமைச் செயலாளரே பேட்டியளித்துள்ளார். மேலும் அதிகாரிகள், ஊழியர்கள் அலுவலகத்துக்கு வர வேண்டாம் என வாய்மொழியாகக் கூறப்பட்டிருந்தது. மேலும் 50,000 டிரைவர்-கண்டக்டர்கள் பஸ்களை இயக்க முன் வந்தும் கூட அவர்ளை செயல்பட விடாமல் தடுத்துள்ளனர் என்றார்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி, மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு, தமிழக தலைமைச் செயலாளர் திரிபாதி, டிஜிபி ராஜேந்திரன், போக்குவரத்துத்துறைச் செயலாளர் தேவந்தர் நாத் சாரங்கி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இவர்கள் 4 வாரங்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications